Friday, April 08, 2005

பாப்லோ நெரூதா கவிதைகள்

Image hosted by Photobucket.com

பாப்லோ நெரூதா கவிதைகள்
100 கவிதைகள்
தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : சுகுமாரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
11 / 29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை 600 018
தொலைபேசி : 91-44-24993448
மின்னஞ்சல் : uyirmmai@gmail.com


நெரூதா அனுபவம்


இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் தொடர்ந்து கொண்டிருந்த கனவின் நிறைவேற்றம் இந்த மொழியாக்கம். யார் இந்தக் கனவின்காரணமும் பொருளுமாக இருந்தாரோ அந்தக் கவிஞரின் நூற்றாண்டில் இந்த நூல் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.
கவிஞனாக எனது ஆதார அக்கறைகளைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய வெவ்வேறு ஆளுமைகளில் நெரூதாவும் ஒருவர் என்பது இந்த மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இலக்கியவாசிப்பின் ஆரம்ப நாட்களில் என்னைப் பாதித்த கவிஞர்கள் வரிசையில் பாப்லோ நெரூதா இருக்கவில்லை. அன்றைய வாழ்வனுபவத்துக்கும் மனநிலைக்கும் இணக்கமாகவிருந்தவர் -மற்றொரு ஸ்பானியக் கவிஞரான செஸார் வயெஹோ.
தனி அனுபவத்தின் இருளும் துயரும் இழைந்த வயெஹோவின் கவிதையுலகம் என் இயல்புக்குப் பொருத்தமானதாக இருந்தது. உலகக் கவிதைத் திரட்டுகளில் வாசித்த வயெஹோ கவிதைகளின் பின்னணி விவரங்களில் நெரூதாவின் பெயரும் உடன்நிகழ்வாகத் தொடர்ந்திருந்தது. நெரூதாவை நெருங்க எனக்கு வழிகாட்டியவர் வயெஹோ. பாப்லோ நெரூதா என்ற பெயரைத் தமிழில் நான் பார்த்தது என் பதினாறாவது வயதில்.
’ கண்ணதாசன்’இதழொன்றில் 1973 நவம்பர் அல்லது டிசம்பர் இதழில் தி.க.சிவசங்கரன்
மொழிபெயர்ப்பில் நெரூதாவின் அரசியல் கவிதையன்று வெளியாகியிருந்தது.அப்போதைய அதிபரான நிக்சனையும் சால்வடெர் அலெண்டே தலைமையில் சிலியில் உருவாகியிருந்த ஜனநாயக அரசை அமெரிக்க ஆதரவுடன் கவிழ்த்த பினோஷேவையும் ‘ஓநாய்கள்’என்று சீற்றமான வார்த்தைகளில் குற்றம்சாட்டியது கவிதை. அதே ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்க ஒத்துழைப்புடன் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் அலெண்டே கொல்லப்பட்டார்.அலெண்டே மறைந்த பதின்மூன்றாம் நாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச்
சிகிச்சையிலிருந்த நெரூதாவும் மரணமடைந்தார். மரணத்தின் காரணம், முற்றிய நோய் மட்டுமல்ல; சிலிக்கு நேர்ந்த அரசியல் விபத்தும்தான்.

கவிதையை வாசித்த முதல் வாய்ப்பில் இந்தப் பின்னணி எதையும் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் அந்த வரிகளிலிருந்த மின்சாரம் சிந்தனையில்
வெளிச்சமாகப் படர்ந்து இன்றும் நீடிக்கிறது.
சுகுமாரன்
(நூலின் முன்னுரையிலிருந்து)
நூலிலிருந்து. . .

என் கவிதையில் கடவுள்
எனது கொடும் விதி,
கடவுள் என் கவிதையில் இருப்பாரென்றால்
நானே கடவுள்
கடவுள் உன் துயரக்கண்களில் இருப்பாரென்றால்
நீயே கடவுள்
நமது இந்த மகத்தான உலகில் எவருமில்லை
நம்மிருவர் முன் மண்டியிட.
மது
நமது பாடலிலிருந்து தொலைவாகவிருப்பதால்
வெளிறிப்போன பெரும் நதியிலிருந்து வந்த,
பூமத்தியரேகையிலிருந்து வந்த,
இலையுதிர்கால மது அல்லது வசந்த மது.
இலைகள் சிதறிக்கிடக்கும் மேஜையருகில்
உடன் அருந்தத் தோழர்கள்.
நான் உற்சாகக் குடிகாரன்.
நீங்கள் இங்கே வந்திருந்தால்,
உங்கள் வாழ்க்கையின் ஒரு துண்டைப் பிய்த்துப்பார்த்திருப்பேன்.
நீங்கள் விடைபெறும்போது
எனக்குச் சொந்தமான எதையேனும்,
தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எதையேனும்,
நீங்கள் எடுத்துச்செல்லலாம் . . .
கொஞ்சம் ரோஜாக்கள்,கொஞ்சம் அத்திப்பழங்கள்
அல்லது
சீக்கிரம் எரியும் சில வேர்களை.
நமது மதுக்கோப்பைகள் கவிழ்ந்து ஒழுகி
மேஜை சிவப்பாகும்வரை
நீங்கள் என்னோடு பாடிக்கொண்டிருக்கலாம்.
உங்கள் உதடுகளுக்கான இந்த மது
தூசிபடிந்த திராட்சைக்குலைகளிலிருந்தே
நேரடியாக வந்திருக்கிறது.
எனது பாடலின் எத்தனை சாயல்கள் மாறிப்போயின.
எனது பழைய தோழர்களே!
முகத்தோடு முகமாக நேசித்தேன் நான்.
வெளியே கடினமும் உள்ளே கனிவுமான
பழங்களின் தோட்டம் என் வாழ்க்கை.
எனது வீரிய விஞ்ஞானத்தை என் வாழ்க்கையிலிருந்தே ஒருமையுடன் வடித்தெடுத்தேன்.
உனது கையைக் கொடு
என்னுடன் சும்மா வா.
எனது சொற்களில் எதையும் தேடவேண்டாம்
ஒரு செடியின் கசிவைவிட அதில் அதிகமொன்றுமில்லை.
ஒரு தொழிலாளியிடம் எதிர்பார்ப்பதைவிட
என்னிடம் ஏன் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்?
மண்ணில் அடுக்கியடுக்கி
எனது பட்டறையை நானே உருவாக்கினேனென்று
உங்களுக்குத் தெரியும்.
எனது நாவைத் தவிர
வேறொன்றால் நான் பேசுவதில்லையென்றும்
உங்களுக்குத் தெரியும்.
இந்தக் காற்றைத் தாங்கமுடியாதென்றால்
மருத்துவரைத் தேடிப்போங்கள்.

பூமியின் முரட்டுமதுவைப் புகழ்ந்து பாடுவோம்
இலையுதிர்காலக் கோப்பைகளால் மேஜைமேல் தாளமிடுங்கள்
ஒரு கித்தார் அல்லது மௌனம்
மறைந்துபோன நதிகளின் மொழியில் அல்லது
பொருளற்ற கண்ணிகளால்
நமது நேசத்தின் வரிகளைப் பாடிக்கொண்டிருக்கட்டும்;
பாடட்டும்.
மொழிபெயர்ப்பாளர்

சுகுமாரன் 1957 ஜூன் 11 கோயம்புத்தூரில் பிறந்தார். கவிதைகளுடன்
கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
நான்கு கவிதைத் தொகுப்புகள் (கோடை காலக் குறிப்புகள்,
பயணியின் சங்கீதங்கள், சிலைகளின் காலம், வாழ்நிலம்)
ஒரு கட்டுரைத் தொகுப்பு (திசைகளும் தடங்களும்),
மூன்று மொழியாக்க நூல்கள்
(மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை (விமர்சனம்),
வெட்டவெளி வார்த்தைகள் (கன்னட வசன கவிதை),
இதுதான் என் பெயர் (சக்கரியாவின் மலையாள நாவல்)
கவிதையின் திசைகள் (உலகக் கவிதைகள்) ஆகியவை வெளியாகியுள்ளன.

தற்போது திருவனந்தபுரத்தில் மலையாளத் தொலைக்காட்சியான
சூர்யா டி.வியில் பணியாற்றி வருகிறார்.

3 comments:

பாலு மணிமாறன் said...

நல்ல துவக்கம். உங்கள் பதிப்பகம் புதிய எல்லைகளை எட்ட வாழ்த்துகள்.

ஒரு சின்ன வேண்டுகோள் - கறுப்புப் பிண்ணனியில் வெள்ளை எழுத்துகள் என்பது அழகுதான். ஆனால் small fonts கண்ணுக்கு சிரமம் தருகிறது. ( இது நான் மட்டும் உணரும் பிரச்சனையா என்று தெரியவில்லை ) பதிவுகளை normal fonts - ல் தர முடியுமா?

Anonymous said...

best regards, nice info Cisco systems and home 1980 fiat strada picture http://www.wells-fargo-refinance-3.info/Maine-refinance.html free lesbian toy pictures Bmw dealers maryland Free teen anal hardcore pic roulette casio on line play http://www.hair-loss-products-9.info/reviewsprovigiluse.html C.o.d accepted for purchasing butalbital amateur gay porno movies twinks www forced com Vitamins to help you feel better Alarm auto hornet Big screen car monitors generic zoloft in fioricet designer black shirt back eagle sleeve Article insurance vehicle+

Unknown said...
This comment has been removed by the author.