Thursday, January 05, 2006

உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்

உயிர்மை பதிப்பகம் 2006ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இரண்டு பெரும் புத்தக வெளியீட்டு விழாக்களை ஜனவரி 6-7தேதிகளில் அடுத்தடுத்த தினங்களில் நடத்தவிருக்கிறது.

ஜனவரி 6 அன்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில்(·பிலிம் சேம்பர், 605 அண்ணா சாலை, சென்னை) மாலை ஆறு மணிக்கு சுஜாதாவின் பத்துப் புத்தகங்கள் ஒரே மேடையில் வெளிடப்படுகின்றன. சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், திரைக்கதை பயிற்சிப் புத்தகம், சுஜாதாவின் நாடகங்கள்(முழுத் தொகுப்பு), சுஜாதாவின் மர்மக் கதைகள் (முழுத் தொகுப்பு), சுஜாதா பதில்கள்(இரண்டாம் பாகம்), புதிய நீதிக் கதைகள் ஆகிய புதிய நூல்களுடன் ரத்தம் ஒரே நிறம், வஸந்த் வஸந்த், வண்ணத்துப் பூச்சி வேட்டை, திருக்குறள் புதிய உரை ஆகிய நூல்கள் மறுபதிப்பாகவும் வெளிவருகின்றன.

இவ் விழாவில் வைரமுத்து, இயக்குனர் ஷங்கர், ரா.கி.ரங்கராஜன், ஜெயமோகன், மதன், கு.ஞான சம்பந்தன், வாஸந்தி, திலகவதி, சுதாங்கன், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றுகின்றனர்

ஜனவரி 7ஆம் தேதி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 10 நவீன எழுத்தாளர்களின் பத்து நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'விழித்திருப்பவனின் இரவு', ஜெயமோகனின் 'ஆழ்நதியைத் தேடி', ஜீ. முருகனின் 'சாம்பல் நிற தேவதை', கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு), மணாவின் 'தமிழகத் தடங்கள்', மு. சுயம்புலிங்கத்தின்' நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்', எம்.யுவனின் 'கை மறதியாய் வைத்த நாள்', 'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது), பிரேம் ரமேஷின் 'உப்பு', அ.ராமசாமியின் 'பிம்பங்கள் அடையாளங்கள்' ஆகிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

நூல்களை பி.ஏ.கிருஷ்ணன், யுவன் சந்திர சேகர், நாஞ்சில் நாடன், பிரேம், ஆர்.நல்லக்கண்ணு, சுகுமாரன், பாவண்ணன், பிரபஞ்சன், ஞானக்கூத்தன், எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு உரையாற்றுகின்றனர்.
விழா குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் அழைக்கலாம். 044-24993448.

இவ்விழாவில் வெளியிடப்படும் நூல் போக சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நாவலான 'உறுபசி', ஜெயமோகன் எழுதிய பேய்க்கதைகள் தொகுப்பான 'நிழல்வெளிக் கதைகள்' லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த 'அன்னா அக்மதோவா கவிதைகள்' உள்ளிட்ட பல நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.

சென்னை புத்த்க கண்காட்சியில் உயிர்மை பதிப்பக ஸ்டால் எண்: s12.

நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com